மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி. கார் மீது தாக்குதல்: ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு
மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.பி. கார் மீது நடந்த தாக்குதலில் ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொண்டது. எனினும், அக்கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு காணப்படுகிறது.
இந்நிலையில், பாங்குரா தொகுதியின் பா.ஜ.க. எம்.பி. சுபாஸ் சர்கார் சென்ற கார் பதல்குரி கிராமம் அருகே சாட்டர்ஜி பகன் பகுதியில் வைத்து தாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதல் பற்றி கூறிய சுபாஸ் சர்கார், தொடர்ந்து நடந்து வரும் அரசியல் தாக்குதலின் ஒரு பகுதி இது. இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாரென என்னால் கூற முடியாது. அவர்களுடைய முகம் மூடப்பட்டு இருந்தது. அதனால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.
ஆனால், அரசியல் பயங்கரவாத செயலில் ஈடுபடும் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலரே இதனை செய்துள்ளனர் என்பது நிச்சயம் என தெரிவித்து உள்ளார்.