கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவையில்லை - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ வழிகாட்டுதலில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறை கைவிடப்பட்டுள்ளது.

Update: 2021-05-17 21:26 GMT
புதுடெல்லி,

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளில் பிளாஸ்மா சிகிச்சையும் ஒன்று. கொரோனா பாதிப்பு பரவத்தொடங்கியது முதல் பிளாஸ்மா சிகிச்சை முறை மிகவும் பிரபலமாகி வந்தது. 

கொரோனா சிகிச்சை முறையில் பிளாஸ்மா சிகிச்சை முறை பயனுள்ளதாக உள்ளதா? என்பது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்தனர். 

அந்த ஆய்வில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பில் இருந்து குறைய வைப்பதிலோ? அல்லது உயிரிழப்பை குறையவைப்பதிலோ? பிளாஸ்மா சிகிச்சை முறையில் எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

மேலும், கொரோனா பாதிக்கப்பட்டோரை குணப்படுத்துவதில் பிளாஸ்மா சிகிச்சை எந்த பங்கையும் அளிக்கவில்லை என்பதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை நிபுணர் குழுவினர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் வழங்கியது. இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ வழிகாட்டுதலில் இருந்து பிளாஸ்மா சிகிச்சை முறை கைவிடப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்