‘கொரோனா பாதித்தவர்களின் விவரங்கள் ‘கோவின்’ இணையதளம் மூலம் திரட்டப்படுவதில்லை’ மத்திய அரசு விளக்கம்
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான பதிவுக்காக ‘கோவின்’ இணையதளம், செயலி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்த செயலியில், முதல் தவணை தடுப்பூசிக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசிக்கும் இடையிலான கால வரம்பு உள்ளிட்ட அரசு அவ்வப்போது அறிவிக்கும் வழிகாட்டுதல்களை செயல்படுத்த சில விவரங்களை மட்டும் கேட்பதுடன், புதிய வழிகாட்டுதல் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் கோவின் இணையதளம் அல்லது செயலி மூலம் திரட்டப்படுவதில்லை என மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் டுட்டரில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 21.58 கோடியை தாண்டியுள்ளது.
18-44 வயது பிரிவினருக்கான தடுப்பூசி திட்டத்தில் இதுவரை 2.02 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி ஒரே நாளில் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 18 முதல் 44 வயதுடைய 13 லட்சத்து 473 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், அதே வயதுடைய 205 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.