காஷ்மீர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சாலையோரம் பிணமாக மீட்பு

கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் சேர்ந்த பயங்கரவாதி சாலைப்பகுதியில் பிணமாக மீட்கப்பட்டுள்ளான்.

Update: 2021-06-14 07:15 GMT
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சோபியான் மாவட்டம் ஷனப்புரா பகுதியை சேர்ந்தவன் அமீர் அகமது மாலிக். 22 வயதான அமீர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது வீட்டை விட்டு வெளியேறி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பில் சேர்ந்தார். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான அல்-படர் பயங்கரவாத அமைப்பில் அமீர் அகமது மாலி இணைந்தான்.

இந்நிலையில், சோமியான் மாவட்டத்தின் சவுரா பகுதியில் உள்ள ஆன்சர் ஏரிக்கு செல்லும் சாலை அருகே ஒருநபர் உயிரிழந்தநிலையில் கிடப்பதை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சாலை அருகே கிடந்த அந்த உடலை மீட்டு உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் உயிரிழந்தது பயங்கரவாதி அமீர் அகமது மாலிக் என்பது தெரியவந்தது. இதையடுத்து, பயங்கரவாதி அமீரின் உடலை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு இடையே நடந்த சண்டையில் பயங்கரவாதி மாலிக் கொல்லப்பட்டு ஏரிசெல்லும் சாலைபகுதியில் வீசப்பட்டிருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்