கொரோனாவை காரணம் காட்டி மாநிலங்களவை தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

கொரோனாவை காரணம் காட்டி மாநிலங்களவை தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பில்லை என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 13:00 GMT
புதுடெல்லி,

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை நிரப்புவது தொடர்பாக திமுக எம்.பி.க்கள் டி.ஆர் பாலு மற்றும் வில்சன் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பேசினர். இதன் பின்னர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- 

“மாநிலங்களவையில் காலியாக உள்ள 3 உறுப்பினர் பதவிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் எடுத்துக் கூறி, மாநிலங்களவை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க வலியுறுத்தியுள்ளோம்.

சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை பின்பற்றுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். 

கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க வாய்ப்பில்லை. மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு தான் முன்னுரிமை. சித்தாந்த ரீதியான அரசியல் செய்வதற்கான நேரம் இது இல்லை. தடுப்பூசி மட்டுமே தற்போதைய உடனடி தேவையாக உள்ளது.”

இவ்வாறு டி.ஆர்.பாலு எம்.பி. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்