தமிழக பாஜக எம்.எல்.ஏக்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள் - பிரதமர் மோடி டுவீட்
தமிழக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுடெல்லி:
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தோல்வியை தழுவியது. பா.ஜனதா 4 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்துக்குள் பா.ஜனதா நுழைந்துள்ளது.
இந்தநிலையில், தமிழக எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோர் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாஜக தமிழக தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ-க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர். காந்தி மற்றும் சி.கே. சரஸ்வதி ஆகியோருடன் கலந்துரையாடினேன்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அவர்கள் பகிர்ந்தனர். வரும் காலத்தில் அவர்களது பெரு முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.