மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் - டி.கே.சிவக்குமார்
மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மண்டியா கே.ஆர்.எஸ்.அணையில் விரிசல் ஏற்பட்டதாக கூறியுள்ள சுமலதா எம்.பி. பற்றி, குமாரசாமி சில கருத்துகளை கூறியுள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே மோதல் உண்டாகி உள்ளது. அவர்கள் பிரச்சினையில் காங்கிரஸ் ஒருபோதும் தலையிடாது.
அணையில் விரிசல் ஏற்பட்டு இருந்தால் அதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா, மந்திரிகள், நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவார்கள். நாங்கள் ஏதாவது கருத்து கூறி மக்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.
சுமலதா-குமாரசாமி பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது காங்கிரஸ் வேலை அல்ல. எங்களுக்கு வேறு வேலை உள்ளது. மேகதாது திட்டத்தை எடியூரப்பா செயல்படுத்த வேண்டும். அரசு சரியாக செயல்படாத போது நாங்கள் அறிவுரை கூறுவோம். இதுதான் எங்கள் வேலை.
இவ்வாறு அவர் கூறினார்.