மத்திய உள்துறை செயலாளருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிற்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-08-13 00:26 GMT
புதுடெல்லி,

மத்திய உள்துறை செயலாளராக இருப்பவர் அஜய்குமார் பல்லா. அடுத்தவாரம் இவர் ஓய்வுபெற உள்ள நிலையில் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய உள்துறை செயலாளராக இருக்கும் அஜய்குமார் பல்லா வருகிற 22-ந்தேதி ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

அசாம்-மேகாலயா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய்குமார் பல்லா, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) முடிவடைந்த நிலையில், அப்போதும் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

மேலும் செய்திகள்