ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும்: பா.ஜனதா

ராகுல்காந்தியின் ‘டுவிட்டர்’ கணக்கை மீண்டும் முடக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2021-08-17 23:55 GMT
அரசியல் ஆதாயம் தேடுகிறார்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட பா.ஜனதா அலுவலகத்தை அக்கட்சியின் தலைவர் ேஜ.பி.நட்டா நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-
ராகுல்காந்தியின் அரசியல் சுற்றுலா தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. அவர் அமேதியில் தோற்று விட்டார். அதனால், வயநாடுக்கு ஓடிவிட்டார். மாநிலத்தை மாற்றுவதால், ஒருவரின் நடத்தையோ, உள்நோக்கமோ மாறிவிடப் போவதில்லை.டெல்லியில், சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட விவகாரத்தை ராகுல்காந்தி அரசியலாக்கி வருகிறார். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரச்சினைகளை அரசியலாக்குவது சரியல்ல.கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதுமான பாதிப்பில் 50 சதவீதம், கேரளாவில் ஏற்பட்டு வருகிறது. இந்த கேரள மாடல், மோசமான நிர்வாகத்துக்கான மாடல்.

இவ்வாறு அவர் பேசினார்.

மீண்டும் முடக்குங்கள்

இதற்கிடையே, பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை அவர்களின் ஒப்புதலுடன் வெளியிட்டதாக ராகுல்காந்தி கூறியிருந்தார். ஆனால் அதை அவர்கள் மறுத்துள்ளனர்.இதனால் ராகுல்காந்தி டுவிட்டர் கணக்கை மீண்டும் முடக்க வேண்டும். அவரது அரசியல் கணக்கை நாட்டு மக்கள் ஏற்கனவே முடக்கி விட்டனர். அதுபோல் டுவிட்டர் கணக்கும் முடக்கப்பட வேண்டும்.ராகுல்காந்தி பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டவர். அவரது நம்பகத்தன்மை போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்