சமூக விரோதிகளின் பெற்றோரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்; ஆந்திர மகளிர் காங்கிரஸ் தலைவி பரபரப்பு பேச்சு
சமூக விரோதிகள் உடன் அவர்களது பெற்றோரையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என ஆந்திர மகளிர் காங்கிரஸ் தலைவி பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விஜயவாடா,
ஆந்திர பிரதேசத்தில் குண்டூரை சேர்ந்த பி.டெக் 3ம் ஆண்டு படித்த என். ரம்யஸ்ரீ என்ற கல்லூரி மாணவி சுதந்திர தினத்தன்று, கத்தியால் குத்தப்பட்டதில் உயிரிழந்து உள்ளார். இதற்கு ஒரு தலை காதல் காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் பெற்றோரை ஆந்திர மகளிர் காங்கிரஸ் தலைவி கிதம்பி பிரமீளா நேற்று சந்தித்து பேசியுள்ளார்.
இதன்பின் அவர் கூறும்போது, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என அரசை சாடியதுடன், பாலியல் வன்கொடுமைகள் மற்றும் படுகொலைகள் நாள்தோறும் நடைபெறும் சம்பவங்களில் ஒன்றாகி விட்டது என கூறினார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு எதுவும் செய்யவில்லை என கூறியுள்ள அவர், சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் அவர்களுடைய பெற்றோரையும் வழக்கில் சேர்க்க வேண்டும்.
அவர்களது குழந்தைகள் குற்றவாளிகள் என அறியப்பட்டால், பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என பெற்றோர் கேட்டு கொள்ளப்பட வேண்டும். இந்த பொறுப்பு அவர்கள் மீது விழும்போது, குழந்தைகளை பெற்றோர் நன்றாக கவனித்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.