மராட்டியம்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து - 4 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் அல்ஹஸ்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷ வலிஷா (51), அவரது மனைவி ஆர்த்தி வலிஷா (41), மற்றும் மகன் ராஜ் வலிஷா (12) ஆகிய 3 பேரும் அமீர்நாத் பகுதியில் நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்று விட்டு அவர்கள் 3 பேரும் நேற்று இரவு ஆட்டோ மூலம் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். பாலி என்ற கிராமம் அருகே வந்துகொண்டிருந்த போது சாலையின் எதிரே வேகமாக வந்த கார் ஆட்டோ மீது மோதியது.
இந்த கோர விபத்தில் வர்ஷ வலிஷா, ஆர்த்தி வலிஷா, ராஜ் வலிஷா மற்றும் ஆட்டோ டிரைவர் என ஆட்டோவில் பயணம் செய்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்திற்கு காரணமான கார் டிரைவர் தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான கார் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.