ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் - மும்பை கோர்ட்

2 மாதங்களுக்கு பிறகு ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு மும்பை கோர்ட்டில் ஜாமீன் கிடைத்து உள்ளது.

Update: 2021-09-20 19:33 GMT
மும்பை, 

ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ரியான் தோர்பேயும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிகையை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஜாமீன் கேட்டு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போலீசார் ஒரு ஆதாரங்களை கூட குற்றப்பத்திரிகையில் கூறவில்லை. இதேபோல வழக்கில் ராஜ்குந்த்ரா பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது

இந்தநிலையில் நேற்று ஆபாச படவழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. அவரது கூட்டாளி ரியான் தோர்பேவுக்கும் ஜாமீன் கிடைத்து உள்ளது. ஆபாச பட வழக்கில் கைதாகி 2 மாதங்களுக்கு பிறகு ராஜ்குந்த்ரா, அவரது கூட்டாளிக்கு ஜாமீன் கிடைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்