உத்தரபிரதேசத்தில் துணை சபாநாயகர் ஆகிறார் சமாஜ்வாடி அதிருப்தி எம்.எல்.ஏ.!

உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா ஆதரவுடன் சமாஜ்வாடி அதிருப்தி எம்.எல்.ஏ. துணை சபாநாயகர் ஆகிறார்.

Update: 2021-10-17 22:23 GMT
லக்னோ, 

உத்தரபிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.எல்.ஏ. ஆனவர் நிதின் அகர்வால். அதன்பிறகு ஆளும் கட்சியான பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

உத்தரபிரதேசத்தில், சட்டசபை துணை சபாநாயகர் பதவி, முக்கிய எதிர்க்கட்சிக்கு வழங்கப்படுவது வழக்கம். அதை பின்பற்றி சமாஜ்வாடி கட்சி நரேந்திர வர்மா என்பவரை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், பா.ஜனதா இன்னும் சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிதின் அகர்வாலை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. நிதின் அகர்வால், நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மந்திரிகள் உடன் இருந்தனர்.

சட்டசபையில், பா.ஜனதாவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், பா.ஜனதா ஆதரவுடன் நிதின் அகர்வால் வெற்றி பெறுவது உறுதியாகி இருக்கிறது. அதே சமயத்தில், இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சி என்று சமாஜ்வாடி கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும்நிலையில் இத்தேர்தல் நடக்கிறது.

மேலும் செய்திகள்