“உரத்தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம்” - மத்திய மந்திரி

உரத்தட்டுப்பாடு குறித்த வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என மத்திய மந்திரி பக்வந்த் குபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2021-10-28 10:09 GMT
புதுடெல்லி,

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் இது குறித்து மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை மந்திரி பக்வந்த் குபா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், நாட்டில் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த 4 மாதங்களுக்குத் தேவையான உரங்களை விவசாயிகள் சேமித்துக் கொள்ள வேண்டும் என பரவும் வதந்திகளை விவசாயிகள் நம்ப வேண்டாம் என்றும், அத்தகைய வதந்திகள் பொய்யானவை மற்றும் ஆதாரமற்றவை என்றும் தெரிவித்தார். 

மேலும் டை அம்மோனியம் பாஸ்பேட் உரங்களை விட காம்ப்ளக்ஸ் உரங்கள் அதிக பயன் தருவதால், விவசாயிகள் இத்தகைய உரங்களை வாங்க மத்திய அரசு பரிந்துரைக்கிறது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அதற்கு தான் உறுதியளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்