40 வயதில் மலர்ந்த காதல்: 6 குழந்தைகளின் பெண் 14 வயது சிறுவனுடன் ஓட்டம்

திருமணமாகி 6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் மைனர் சிறுவனை காதலித்து அவனுடன், வீட்டை விட்டு ஓடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2021-12-02 16:50 GMT
காந்திநகர்,

காதலுக்கு கண் இல்லை என்பார்கள், ஆனால் வயதும் இல்லை என்பதை போல ஒரு சம்பவம் குஜராத்தில் அரங்கேறி உள்ளது. குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் பஃதேபுரா தாலுகாவின் சக்ரபதா எனும் கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் பெண் ஒருவர் காந்தி நகரில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் காந்தி நகரில் தன்னுடன் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த அம்லிகேதா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்று கூறப்படுகிறது. அந்த சிறுவனை திருமணமான அப்பெண் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.  இருவரின் காதலும் நாளுக்கு நாள் வளர்ந்த நிலையில், சிறுவனுடனே சென்றுவிடுவது என தீர்மானித்த 40 வயது பெண், தனது கணவர், 6 குழந்தைகளை எதிர்காலத்தை கூட நினைத்து பார்க்காமல் அவர்களை நிர்கதியாக்கிவிட்டு சிறுவனுடன் சென்று தலைமறைவாகினார்.

இதனிடையே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சிறுவனின் பெற்றோர் காவல்நிலையத்தில் தனது மகனை அப்பெண் கடத்திச் சென்றுவிட்டதாக புகார் தெரிவித்தனர். தனது மகன் 2007-ல் பிறந்தான், அவனுக்கு 14 வயது தான் ஆகிறது என அவனின் தந்தை ஆதார் அட்டையை ஆதாரமாகக் காட்டி கூறியுள்ளார். அதே நேரத்தில் போலீசாரின் விசாரணையின்படி தந்தைக்கும் மகனுக்குமான தொலைபேசி உரையாடலின்படி சிறுவன் தான் 1997-ல் பிறந்தவன், எனக்கு சட்டப்படியான வயது இருப்பதாக தெரிவித்திருக்கிறான். எனவே குழப்பமடைந்துள்ள போலீசார் தந்தையிடம் சிறுவனின் பிறப்பு சான்றிதழை கொண்டுவரும்படி தெரிவித்திருக்கின்றனர். சிறுவனுக்கு மைனர் வயது என்பது உறுதியானால் மட்டுமே போஸ்கோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியும் என போலீசார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஷெலாட் கூறுகையில், 

சிறுவன் மற்றும் பெண் என இருதரப்பினருமே உண்மையை மறைக்கிறார்கள். இரு குடும்பத்தினரும் பணத்தை அடிப்படையாக கொண்டு விஷயத்தை தீர்க்க நினைத்து அது தோல்வியில் முடிந்ததால் தான் காவல்நிலையத்துக்கு வந்துள்ளனர். இப்பகுதியில் வீட்டை விட்டு செல்லும் குடும்பத்தினர் பணத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இது போன்ற விஷயங்களை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வார்கள். தப்பிச் சென்ற இருவரையும் இரு குடும்பத்தினரும் ஒரு சத்ராம்பூர் எனும் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இருவரும் அங்கிருந்து தப்பியிருப்பதாக ஷெலாட் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்