வானில் உள்ள இலக்கை தாக்கவல்ல ஏவுகணை சோதனை வெற்றி
வான் இலக்கை தாக்கும், குறுகிய தூர ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) வெற்றிகரமாக சோதனை செய்தது.
புவனேஸ்வர்,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கிய ஏவுகணையின் சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஒடிசா மாநிலம் பலசோர் அருகே சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து இந்த ஏவுகணை சோதனை நடந்தது.
இது தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கவல்லது. 50 கி.மீ. தூரம்வரை பாய்ந்து சென்று தாக்கும். கடற்படை கப்பல்களில் பொருத்துவதற்காக இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய சோதனையின்போது, இலக்குக்காக வைக்கப்பட்ட மின்னணு சாதனம் ஒன்றை துல்லியமாக தாக்கியது. இதையொட்டி, விஞ்ஞானிகளுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக, சோதனை தளத்தில் இருந்து இரண்டரை கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.