பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜனதாவை தோற்கடியுங்கள் - ரந்தீப் சுர்ஜேவாலா

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பா.ஜனதாவை தோற்கடியுங்கள் என்று காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-02 03:27 GMT
புதுடெல்லி,

காலணிகள், ஆன்லைன் உணவு வினியோகம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. 

இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், 

‘2014-ல் மோடி அரசு அமைந்தபிறகு பல பொருட்களின் விலை அதிகரித்து இருக்கிறது. மோடி அரசு என்றால் விலைவாசி உயர்வு என்று அர்த்தம். மோடி ஆட்சி இருந்தால் விலைவாசி உயர்வும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ என்று தெரிவித்தார்.

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி.யை 5-ல் இருந்து 12 ஆக உயர்த்தாததற்கு வரவிருக்கும் சட்டசபை தேர்தல்களே காரணம் எனக்கூறிய சுர்ஜேவாலா, அந்த தேர்தல் முடிந்ததும் இந்த விலை உயர்வு இருக்கும் எனவும் எச்சரித்தார். இந்த விலை உயர்வை திரும்பப்பெறாமல் தள்ளிவைத்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 

நாட்டின் பல மாநிலங்களில் நடந்த சட்டசபை இடைத்தேர்தல்களில் பா.ஜனதா தோல்வியடைந்ததால் பெட்ரோல் மீதான கலால் வரியை குறைத்ததை சுட்டிக்காட்டிய அவர், அதைப்போல பண வீக்கத்தை கட்டுப்படுத்த வருகிற சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதாவை தோற்கடிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்