7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-22 05:09 GMT
Image Courtesy: AFP
திருவனந்தபுரம்

கேரளாவில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த அச்சு என்கிற மிதுன் (24), என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் கடந்த நவம்பர் 30-ம் தேதி பக்கத்துவீட்டில் இருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமி சத்தம் எழுப்பியதும் மிதுன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக, பள்ளிக்கல் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மிதுனை தேடி வந்தனர். மிதுன் கடந்து இரண்டு மாதங்களாக தலைமறைவாகவே இருந்து வந்தார்.

இந்நிலையில், கொல்லம் மாவட்டதில் உள்ள பரிப்பள்ளியில் மிதுன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த மிதுனை சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மிதுன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

மேலும் செய்திகள்