‘பூஸ்டர் டோஸ்’ எடுத்தவர்களில் 70 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - ஆய்வுத்தகவல்

‘பூஸ்டர் டோஸ்’ எடுத்தவர்களில் 70 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2022-04-26 20:49 GMT
கோப்புப்படம்
புதுடெல்லி, 

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களைப்பற்றிய ஒரு ஆய்வை இந்திய மருத்துவ சங்கத்தின் கொரோனா வைரஸ் மீதான தேசிய பணிக்குழுவின் இணைத்தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் தலைமையிலான குழு நடத்தி உள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5,971 பேரைக்கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கொரோனா 3-வது அலையின்போது, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் 70 சதவீதத்தினருக்கு கொரோனா பாதிப்பு வரவில்லை என தெரிய வந்துள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் 2 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே செலுத்திக்கொண்ட 45 சதவீதத்தினருக்கு 3-வது அலையின்போது கொரோனா பாதித்துள்ளது. 5,971 பேரில் 2,383 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். அவர்களில் 30 சதவீதத்தினருக்கு 3-வது அலையின்போது கொரோனா வந்துள்ளது.

3-வது அலையில் கொரோனா 40 வயதுக்கு உட்பட்டவர்களையே அதிகம் தாக்கி இருக்கிறது. கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு விகிதம் ஒரே அளவில் இருப்பதும் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்