ரெயிலில் பயணம் செய்த முஸ்லிம் பயணிக்கு இன்ப அதிர்ச்சியாக இப்தார் விருந்தளித்த ரெயில்வே! குவியும் பாராட்டுக்கள்

அவர் நோன்பு இருப்பதை அறிந்ததும், பழங்கள் மற்றும் சிற்றுண்டியை அளித்துள்ளது இந்திய ரெயில்வே நிர்வாகம்.

Update: 2022-04-27 15:53 GMT
புதுடெல்லி,

ஷாநவாஸ் அக்தர் என்கிற பயணி இரண்டு நாட்களுக்கு முன்பு ஹவுரா சதாப்தி ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது தனக்கு வழங்கப்பட இருக்கும் தேநீரை சற்று தாமதமாக தரும்படி ரெயில்வே பணியாளரிடம் தெரிவித்துள்ளார். 

உடனே அவரிடம் அந்த பணியாளர், "நீங்கள் நோன்பில் இருக்கிறீர்களா?" என்று ஷாநவாஸிடம் கேட்டிருக்கிறார். அதற்கு ஷாநவஸும் 'ஆம்' என்றார்.

அதன் பிறகு நடந்தது தான் ஆச்சரியத்தின் உச்சம். அவர் வேண்டுகோள் விடுத்தது போவே சற்று தாமதாமாகவே ரெயில் பணியாளர், ஷாநவாஸை அணுகியுள்ளார். 

ஆனால், கொண்டு வரப்பட்டது தேநீர் இல்லை... மாறாக ஷாநவாஸூக்கான இப்தார் உணவு. 
அவர் நோன்பு இருப்பதை அறிந்ததும்,  ஒரு தட்டில் கொஞ்சம் பழங்கள் மற்றும் சிற்றுண்டியை வைத்து அளித்துள்ளது இந்திய ரெயில்வே நிர்வாகம். 

இதனால் நெகிழ்ந்து போன ஷாநவாஸ், அந்த உணவைப் படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடும்போது, "இப்தார் விருந்தளித்தற்காக இந்திய ரெயில்வேக்கு நன்றி. 

நான் தான்பாத்திலிருந்து ஹவுரா சதாப்தி ரெயிலில் ஏறியவுடன், எனது சிற்றுண்டிகள் கிடைத்தன. நான் நோன்பு இருப்பதால் சிறிது தாமதமாக தேநீர் கொண்டு வருமாறு  ஊழியரிடம் கேட்டுக் கொண்டேன். 

அவர், 'நான் நோன்பு இருக்கிறேனா?' எனக் கேட்டு உறுதிப்படுக்கொண்டார். நான் ஆம் என்று தலையசைத்தேன். பின்னர் இப்தார் உணவுடன் வேறு ஒருவர் வந்தார்" என்று தெரிவித்திருந்தார்.

பல்வேறு தரப்பினரும் இந்திய ரெயில்வேயின் இந்த செயலைப் பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்