பாதுகாப்பு இல்லை எனில் அரசு பதவியை ராஜினாமா செய்வோம்; காஷ்மீரி பண்டிட்டுகள்

காஷ்மீரி பண்டிட் கொலை விவகாரத்தில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காஷ்மீரி பண்டிட்டுகள் பாதுகாப்பு இல்லை எனில் அரசு பதவியை ராஜினாமா செய்வோம் என கூறியுள்ளனர்.

Update: 2022-05-13 07:26 GMT




ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.  இதற்காக, உள்ளூர் இளைஞர்கள் முதல் வெளிநாடுகளில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் வரை காஷ்மீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

இதுதவிர, தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், ஹைபிரிட் வகை பயங்கரவாதிகள் உள்ளிட்டோரும் ராணுவத்துக்கு சவாலாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் சதூரா பகுதியில் அரசு அலுவலகராக இருந்த ராகுல் பட் என்பவரை அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நேற்று சுட்டு கொன்று விட்டு தப்பியோடினர்.

அவரது உடலுக்கு இன்று இறுதி சடங்கு நடந்து வருகிறது.  இதனை முன்னிட்டு காஷ்மீரி பண்டிட்டுகள் பலர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி புத்காமின் ஷேக்போரா பகுதியில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு நிர்வாகம் பாதுகாப்பு வழங்கவில்லையெனில், எங்களுடைய பதவிகளில் இருந்து பெருமளவிலானோர் விலகி விடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட அமித் என்ற காஷ்மீரி பண்டிட் கூறியுள்ளார்.

அவர்களை தொடர்ந்து, அரசு பணியாளர்களாக உள்ள காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ராகுல் பட் கொல்லப்பட்டதற்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் மீது அரசு நிர்வாகம் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளை வீச முடியும் என்றால், பயங்கரவாதியை அவர்களால் பிடித்திருக்க முடியாதா? என போராட்டத்தில் ஈடுபட்ட அபர்ணா பண்டிட் என்பவர் கேட்டுள்ளார்.

மேலும் செய்திகள்