மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை

மைசூருவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-08-27 21:23 GMT

மைசூரு:

மைசூரு நகரம் பரடனபுரா கிராமத்தை சேர்ந்தவர் மகாதேவசாமி (வயது45). இவர் மைசூரு ஆர்.எம்.சி.யார்டு பகுதியில் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா (38). கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்தது. இந்த தம்பதியின் மகள்கள் சந்திரகலா(17), தனலட்சுமி (15). இந்நிலையில் மகாதேவசாமி தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணராஜா போலீஸ் எல்லைக்குட்பட்ட சாமுண்டிபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த 4 நாட்களாக மகாதேவசாமி வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. வீட்டின் உரிமையாளர் அவர்கள் வெளியூறுக்கு சென்றிருக்கலாம் என்று நினைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை தட்டி திறக்கும்படி கூறினார். ஆனால் உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணராஜா போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு 4 பேரும் பிணமாக கிடந்தனர். அதாவது மகாதேவசாமி மற்றும் அவரது இளைய மகள் தனலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தனர். அனிதா மற்றும் மூத்த மகள் சந்திரகலா படுக்கை அறையில் இருந்த நாற்காலியில் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த போலீசார் உடனே 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. அதாவது 4 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் மகாதேவசாமி கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் விசாரணை நடந்து வருவதால் அது குறித்த தகவலை கூற முடியாது என்று போலீசார் தெரிவித்துவிட்டனர். இதற்கிடையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூரு நகரில் பரபரப்பையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்