குருவாயூர்-மதுரை விரைவு ரெயிலில் பயணியை கடித்த பாம்பு?

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பயணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Update: 2024-04-15 21:04 GMT

கோப்புப்படம் 

கோட்டயம்,

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குருவாயூரில் இருந்து நேற்று காலை 9.30 மணியளவில் விரைவு ரெயில் (ரெயில் எண்.16329) மதுரை நோக்கி புறப்பட்டது. 6-வது பெட்டியில் மதுரை சின்ன கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(வயது 23) என்பவர் பயணம் செய்தார்.

தொடர்ந்து எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற பின்னர், கார்த்திக்கை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் கோட்டயம் மாவட்டம் ஏட்டுமானூர் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தது. உடனே கார்த்திக் மீட்கப்பட்டு அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சு மூலம் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பயணியை கடித்தது பாம்பா அல்லது எலியா என்ற சந்தேகம் உள்ளது என்று ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அந்த ரெயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கப்பட்டு, ரெயில்வே ஊழியர்கள், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் பாம்பு இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி, ரெயிலில் இருந்து பிரிக்கப்பட்டது. பின்னர் மற்ற பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags:    

மேலும் செய்திகள்