நாடகம் பார்க்க சென்ற பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் உள்பட 5 பேர் கைது

சத்தீஷ்காரில் நாடகம் பார்க்க சென்ற பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-03-06 03:33 GMT

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் பஸ்தார் மாவட்டத்தின் மாவ்லிபதர் பகுதியில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருவிழா சமீபத்தில் நடந்து உள்ளது. இதில், பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்வது வழக்கம். பிப்ரவரி மாத இறுதி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

இதில், நாடக போட்டி, சேவல் சண்டை மற்றும் அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஓவிய போட்டியிலும் பங்கேற்பார்கள். பிற நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

இதன்படி, கடந்த சனி கிழமை நடந்த நிகழ்ச்சியின்போது நாடகம் நடத்தப்பட்டு உள்ளது. இதனை பார்க்க சென்ற பெண் ஒருவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆட்கள் இல்லாத பகுதியில் இரவில் தனியாக இருந்து உள்ளார்.

இதனை கவனித்த ஏறக்குறைய 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெண்ணை ஆளில்லாத பகுதிக்கு கடத்தி சென்று, கும்பலாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளது. இதன் பின்னர், சுயநினைவு திரும்பி எழுந்த பெண் வீட்டுக்கு சென்று நடந்த விவரங்களை கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, தர்பா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இதன்பின்னர் தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு நிவேதிதா பால் கூறும்போது, திருவிழாவில் கலந்து கொள்ள வந்த பெண் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தப்பியோடிய மீதமுள்ள நபர்களை தேடி வருகிறோம். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்