டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு புதிய கவுரவம்
சென்னையை சேர்ந்த சரத் கமல் இந்த ஆண்டுக்கான தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.;
கோப்புப்படம்
கொல்கத்தா,
கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 3 தங்கம், ஒரு வெள்ளி என்று 4 பதக்கம் வென்று அசத்திய இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சென்னையை சேர்ந்த சரத் கமல் இந்த ஆண்டுக்கான தயான்சந்த் கேல்ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் வீரர்கள் கமிஷனின் உறுப்பினராக 40 வயதான சரத் கமல் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இந்த பொறுப்புக்கு தேர்வான முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பல்வேறு கண்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில் சரத்கமல் 2-வது இடத்தை பிடித்து இந்த கவுரவத்துக்கு தேர்வாகி இருக்கிறார். இந்த பொறுப்பை அவர் 4 ஆண்டுகள் வகிப்பார். சமீபத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வீரர்கள் கமிஷனின் 10 வீரர்களில் ஒருவராக சரத் கமலும் தேர்வு செய்யப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.