ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் தலையில் கல்லைப்போட்டு கொன்றது அம்பலம்

சிவமொக்கா டவுனில் சாலையோரம் தூங்கியவர் கொல்லப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவர் கைதாகி உள்ளார். ஓரினச்சேர்க்கையில் ஈடுபட மறுத்ததால் அவரை வாலிபர் கொன்றது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

Update: 2023-09-01 18:45 GMT

சிவமொக்கா:-

சாலையோரம் படுத்து தூங்கியவர்

சிவமொக்கா(மாவட்டம்) டவுன் திப்பு நகர் 7-வது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சண்ணா. இவர் அப்பகுதியில் பழைய காகிதங்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்தார். இவர் தினமும் பழைய காகிதங்களை சேகரித்து மூட்டையாக கட்டி வைத்துவிட்டு அதன் அருகே சாலையோரமாக படுத்து தூங்குவது வழக்கம். அதன்படி கடந்த மாதம்(ஆகஸ்டு) 22-ந் தேதி இரவும் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த யாரோ ஒரு மர்ம நபர் அவரை சரமாரியாக தாக்கி தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்தார். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி துங்கா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஓரினச்சேர்க்கை

மேலும் அந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது மஞ்சண்ணாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த தவுபிக்(வயது 32) என்பது தெரியவந்தது. 

மேலும் அவர் தலைமறைவாக இருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த தவுபிக்கை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது ஓரினச்சேர்க்கை பிரியரான தவுபிக், சம்பவத்தன்று சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மஞ்சண்ணாவை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார்.

கைது

அதற்கு மஞ்சண்ணா மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்த மஞ்சண்ணா மயங்கி கீழே விழுந்திருக்கிறார். அப்போதும் அவரை ஓரினச்சேர்க்கைக்கு வரும்படி தவுபிக் மிரட்டி உள்ளார். ஆனால் தொடர்ந்து மஞ்சண்ணா மறுக்கவே ஆத்திரத்தில் அவரது தலையில் கல்லைப் போட்டு தவுபிக் படுகொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் தவுபிக்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்