ஆசிரியரை ஓட ஓட விரட்டி 3 முறை துப்பாக்கியால் சுட்ட 10ம் வகுப்பு மாணவன்!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-09-24 12:36 GMT

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில் பள்ளி மாணவர் ஒருவர் தனது ஆசிரியரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10ம் வகுப்பு மாணவன் ஒருவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் பயின்று வந்துள்ளான். இந்நிலையில் பள்ளியில் உள்ள ஆசிரியர் ஒருவர் அந்த மாணவனை திட்டியதால் அந்த சிறுவன் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவன் தனது ஆசிரியரை பழிவாங்க முடிவெடுத்துள்ளான். எங்கிருந்தோ தனக்கு கிடைத்த ஒரு நாட்டுத் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு அந்த மாணவன், இன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த ஆசிரியரை நோக்கி வேகமாக ஓடியுள்ளான். பின்னர் அவனிடமிருந்த துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினான்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். எனினும், மாணவன் ஆசிரியரை விடாமல் துரத்திச் சென்று துப்பாக்கியால் 3 முறை சுட்டுள்ளான். அதில் ஆசிரியர் காயமடைந்தார்.

இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் மாணவனை பிடித்துள்ளனர்.இந்த சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனினும் சிறுவன் அவர்களிடமிருந்து தப்பிவிட்டான்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தோட்டாக்கள் உடலில் முக்கியமான உறுப்புகளைத் தாக்காததால், ஆசிரியர் காயமடைந்திருந்தாலும், தற்போது அவரது உயிருக்கு ஆபத்தில்லை.

ஆசிரியர் கண்டித்ததால் மாணவன் மிகவும் வருத்தமடைந்திருப்பது தனக்கு தெரியாது என்று அந்த ஆசிரியர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்