தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவிப்பு..!!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நடிகர் பவன் கல்யாண் கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது.;
Image Courtacy: PTI
அமராவதி,
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
மேலும், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் வருகின்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் பவண் கல்யாண், "தெலுங்கு தேசம் வலுவான கட்சி. ஆந்திராவின் வளர்ச்சிக்கும் சிறந்த ஆட்சிக்கும் தெலுங்கு தேசம் தேவைப்படுகிறது. இன்று தெலுங்கு தேசம் இக்கட்டான சூழலில் உள்ளது. நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த சூழலில் ஜனசேனா இளைஞர்களின் ஆதரவு தெலுங்கு தேசத்துக்கு தேவைப்படுகிறது. தெலுங்கு தேசமும், ஜனசேனாவும் இணைந்தால் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி மூழ்கிவிடும்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக ஊழல் வழக்கில் கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் தற்போது பாஜக கூட்டணியில் இருந்து பவன் கல்யாண் விலகியுள்ளார்.