தேவேகவுடாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

தேவேகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Update: 2024-02-15 22:00 GMT

பெங்களூரு,

முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா (வயது 91) பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். அவர் வீட்டில் இருந்தபடியே அரசியல் பணிகளை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நேற்று பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை அழைத்துச் சென்று பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அவருக்கு லேசான மூச்சுத்திணறல் இருப்பது தெரியவந்து உள்ளது. இதையடுத்து அவருக்கு டாக்டர் சத்திய நாராயணா தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள டாக்டர்கள், தேவேகவுடாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாகவும், பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்