ஆற்றில் மூழ்கி தந்தை-மகன் சாவு

என்.ஆர்.புராவில் பத்ரா ஆற்றில் மூழ்கி தந்தை- மகன் உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-04-09 21:05 GMT

சிக்கமகளூரு:

என்.ஆர்.புராவில் பத்ரா ஆற்றில் மூழ்கி தந்தை- மகன் உயிரிழந்தனர். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

குடும்பத்துடன் கோவிலுக்கு...

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா அண்டுகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் (வயது 50). இவரது மகன் சாத்விக் (14). இவர்கள் குடும்பத்துடன் என்.ஆர்.புரா தாலுகா பாலேஹொன்னூர் அருகே உள்ள உய்கெரே கிராமத்திற்கு உறவினர் வீட்டிற்கு சென்றனர். அங்கு நடந்த அம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். இதையடுத்து அங்கு நடந்த அறுவடை திருவிழா, கலை நிகழ்ச்சிகளை அவர்கள் பார்த்து ரசித்தனர்.

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை அதேப்பகுதியில் உள்ள பத்ரா ஆற்றுக்கு லோகேஷ் மற்றும் சாத்விக் ஆகியோர் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில் சாத்விக் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் அவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லோகேஷ் மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் சாத்விக் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். அவனை காப்பாற்ற சென்ற லோகேசும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

உடல்களை மீட்டனர்

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் பாலேஹொன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பாலேஹொன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ஆற்றில் குதித்து உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தந்தை- மகனின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பாலேஹொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றபோது தந்தை-மகன் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்