மைசூரு அரண்மனை வளாகத்தில் இறுதி கட்ட யோகா பயிற்சி ஒத்திகை

மைசூரு அரண்மனை வளாகத்தில் நேற்று இறுதி கட்ட யோகா பயிற்சி ஒத்திகை நடந்தது.

Update: 2022-06-19 20:53 GMT

மைசூரு அரண்மனை வளாகத்தில் யோகா பயிற்சி நடந்ததை படத்தில் காணலாம்.

மைசூரு:

சர்வதேச யோகா தினவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் யோகா தினவிழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இதற்காக மோடி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவருடன் சுமார் 15 ஆயிரம் பேர் யோகா பயிற்சியில் ஈடுபட உள்ளனர். மைசூருவில் யோகா தினவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் மைசூரு விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் பங்கேற்கும் யோகா தினவிழாவில் கலந்துகொள்ளும்படி மைசூரு மன்னர் குடும்பத்தினருக்கு நேரில் சென்று அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது மைசூரு அரண்மனையில் வைத்து இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவியை பிரதாப் சிம்ஹா எம்.பி., எம்.எல்.ஏ.க்களான ராமதாஸ், எல்.நாகேந்திரா ஆகியோர் சந்தித்து பாரம்பரிய முறைப்படி அழைப்பு விடுத்தனர்.

இதற்கிடையே நேற்று இறுதிகட்ட யோகா பயிற்சி ஒத்திகை நடந்தது. இதில் சுமார் 6 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகா பயிற்சி ஒத்திகையில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி வருகையையொட்டி மைசூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்