மராட்டியத்தில் மனைவியை விஷஊசி செலுத்தி கொன்ற கணவர் கைது

தற்கொலை செய்ததாக கடிதம் எழுதி நாடகம் ஆடியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கண்வரை கைது செய்தனர்.

Update: 2022-11-24 16:21 GMT

புனே,

நர்சுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக மனைவியை விஷ ஊசி செலுத்தி கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

மனைவி பலி

புனே மாவட்டம் முல்ஷி தாலுகா அம்போலி கிராமத்தை சேர்ந்தவர் சுவப்னில் சாவந்த். இவரது மனைவி பிரியங்கா கடந்த 5 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சுவப்னில் சாவந்த் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். கடந்த 14-ந்தேதி மனைவி பிரியங்காவை ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் பிரியங்கா உயிரிழந்து விட்டதாக தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வீட்டில் இருந்த தற்கொலை கடிதம் ஒன்றை கைப்பற்றினர். இதில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷ ஊசி போட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்த கணவர் சுவப்னில் சாவந்திடம் விசாரித்தனர். இதில் அவருடன் வேலை பார்த்து வந்த நர்சிடம் கள்ளக்காதல் ஏற்பட்டது. அவரை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் மனைவி பிரியங்காவை ஒழித்து கட்ட முடிவு செய்து ஆஸ்பத்திரியில் இருந்து விஷ ஊசி மருந்துகளை திருடி சென்றார். பின்னர் பிரியங்காவிற்கு உடலில் செலுத்தி கொலை செய்தார். அவர் தற்கொலை செய்ததாக கடிதம் எழுதி நாடகம் ஆடியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்