நான் வயதில் மூத்தவன்; கடைசியாக வருகிறேன்... சுரங்க தொழிலாளியின் பெருந்தன்மை

சுரங்கத்தில் இருந்தபோது, சக தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்து, அவர்களுக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்று தந்திருக்கிறார்.

Update: 2023-11-29 08:43 GMT

புதுடெல்லி,

உத்தரகாண்டில் உத்தர்காசி நகரில் சில்கியாரா பகுதியில் சுரங்கத்தில் வேலை செய்து வந்த 41 தொழிலாளர்கள் கடந்த 12-ந்தேதி சுரங்க இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். அவர்களை வெளியே கொண்டு வரும் மீட்பு பணியில் அரசு ஈடுபட்டு வந்தது. 17-வது நாளாக மீட்பு பணி நேற்றும் தொடர்ந்தது. இதற்காக டெல்லி, ஜான்சி பகுதிகளில் இருந்து நிபுணர்கள் வந்தனர்.

சுரங்கத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் முயற்சியின்போது, சுரங்கம் திடீரென இடிந்து விழுவதும், அதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதும் தொடர்ந்து வந்தது. சுரங்கத்தின் நுழைவு பகுதி வழியே, பல மீட்டர் நீள குழாயை செலுத்தி அதன்மூலம் தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்தது. மொத்தமுள்ள 57 மீட்டர்கள் தொலைவை அடைவதற்கான முயற்சிகள் நடந்து வந்தன.

17 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர், 41 தொழிலாளர்களும் ஒருவர் பின் ஒருவராக நேற்று வெளியே கொண்டு வரப்பட்டனர். அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். உறவினர்கள், அவர்களை ஆரத்தழுவி, பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அவர்களில், கப்பார் சிங் நேகி என்பவர் சுரங்கத்தில் இருந்தபோது, சக தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். அவர்களுக்கு யோகா மற்றும் தியானம் ஆகியவற்றை கற்று தந்திருக்கிறார்.

அவர்கள் உடல் மற்றும் மனரீதியாக திறம்பட செயல்படுகிறார்களா? என உறுதிப்படுத்தி வந்ததுடன், அவர்களை அமைதியாக வழிநடத்தியுள்ளார். சக தொழிலாளிகளிடம் கடைசியாக மீட்கப்படுபவன் நானாகவே இருப்பேன் என கூறி அவர்களுடைய பாதுகாப்பில் ஈடுபாட்டுடன் இருந்திருக்கிறார்.

அவருடைய சகோதரரான ஜெயமல் சிங் நேகி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நான் வயதில் மூத்தவன். அதனால், சுரங்கத்தில் இருந்து கடைசியாக வருபவன் நானாகவே இருப்பேன் என கப்பார் சிங் என்னிடம் கூறினார் என்று புன்னகையுடன் கூறுகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்