சித்ரதுர்கா டவுனில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2பேர் சாவு

சித்ரதுர்கா டவுனில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-07-23 18:45 GMT

சித்ரதுர்கா-

சித்ரதுர்கா டவுன் கெலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பசவராஜ் (வயது 64). அதேபோல ஈஸ்வரகட்டி கிராமத்தை சோ்ந்தவர் நரசிம்மா (55). இரண்டு பேரும் விவசாயம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் வேலையை முடித்துவிட்டு 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றிருந்தனர். இந்தநிலையில் சித்ரதுர்கா டவுன் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு வந்தது.

இதை பார்த்த பசவராஜ் மற்றும் நரசிம்மா, விபத்தில் இருந்து தப்பிக்க முயற்சித்து, மோட்டார் சைக்கிளை சாலையோரம் திருப்பினர். ஆனால் கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சித்ரதுர்கா டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சித்ரதுர்கா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்