நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-02-25 08:01 GMT

புதுடெல்லி,

மன் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:-

மார்ச் 3-ம் தேதி உலக வனவிலங்கு தினம். இந்த நாள் வன விலங்குகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, உலக வனவிலங்கு தினத்தின் கருப்பொருளில் டிஜிட்டல் கண்டுபிடிப்பு முதன்மையாக வைக்கப்பட்டுள்ளது. நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் பாதுகாப்பிற்காக தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக, அரசின் முயற்சியால், நாட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலம், சந்திராபூர் புலிகள் காப்பகத்தில், புலிகளின் எண்ணிக்கை, 250க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு இளைஞர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள மோட்டார் பிரசிஷன் குரூப் இந்திய வனவிலங்கு நிறுவனத்துடன் இணைந்து இதுபோன்ற ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இது கென் நதியில் முதலைகளைக் கண்காணிக்க உதவுகிறது என்றார்.

மேலும் பிரதமர் மோடி கூறுகையில்,

ஒடிசாவில் உள்ள கலஹண்டியில் ஆடு வளர்ப்பு கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் முக்கிய வழிமுறையாக மாறி வருகிறது. இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் ஜெயந்தி மஹாபத்ரா மற்றும் அவரது கணவர் பிரேன் சாஹு ஆகியோரை பிரதமர் பாராட்டினார்.

அத்துடன், "பீகார் மாநிலம் போஜ்பூரைச் சேர்ந்த பீம் சிங் பவேஷ் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது பணி அவரது பகுதியின் முசாஹர் சமூக மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது. முசாஹர்கள் மிகவும் பின்தங்கிய சமூகமாக உள்ளனர். பீகார் பீம் சிங் பாவேஷ் இந்த சமூகத்தின் குழந்தைகளின் கல்வியில் தனது கவனத்தை செலுத்தியுள்ளார். அவர் எட்டாயிரம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளார் எனவும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்