திரைப்பட பாணியில்... உயிரை துச்சமென மதித்து, ஹீரோவாக செயல்பட்டு 16 பேரை பாதுகாத்த காவல் அதிகாரி

தெலுங்கானாவில் தறிகெட்டு ஓடிய வேனை தைரியமுடன் துரத்தி சென்று, கதவை திறந்து ஒரு கையால் வேனை நிறுத்தி, 16 பேரின் உயிரை காவல் அதிகாரி பாதுகாத்து உள்ளார்.

Update: 2023-03-23 10:31 GMT



ஐதராபாத்,


தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் அரசு தேர்வாணைய வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் (ஏ.பி.வி.பி.) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து, போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். இதன்படி, போராட்டக்காரர்களில் 16 பேரை வேனில் ஏற்றி கொண்டு, சைபாபாத் காவல் நிலையத்திற்கு போலீசார கொண்டு சென்றனர்.

இந்நிலையில், கைரதாபாத் பறக்கும் பாலத்தில் அந்த வேன் சென்றபோது, திடீரென காவலரான ஓட்டுநர் ரமேஷ் (வயது 58) திடீரென வலிப்பு வந்து மயங்கி சரிந்து உள்ளார்.

இதுபற்றி காவல் ஆய்வாளர் கருணாகர் ரெட்டி கூறும்போது, போலீஸ் வேனில் போராட்டக்காரர்களான ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் 16 பேர் மற்றும் நான் அமர்ந்து இருந்தோம். பறக்கும் பால பகுதியை வேன் கடந்து சென்றதும், ஓட்டுநர் சுயநினைவை இழந்த நிலையில், வேன் கட்டுப்பாடின்றி சென்றது.

அந்த வேன் சாலையின் நடுவே பிரிந்து செல்ல வழிகாட்டும் தடுப்பான் மீது மோதி தள்ளாடியபடி சென்றது. உடனே நான் பின் கதவை திறந்து வேனில் இருந்து கீழே குதித்தேன். இதில் வலது முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

அதன்பின்பு, ஓடி சென்று வேனை பிடித்து, ஓட்டுநர் கதவை திறந்தேன். ஓட்டுநர் சீட்டில் சரிந்தபடி காணப்பட்டார். அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டி கொண்டிருந்தது. உடனடியாக வண்டியை ஒரு கையால் இடதுபுறம் திருப்பினேன். மற்றொரு கையால், வண்டியின் பிரேக்கை அழுத்தினேன்.

அதிர்ஷ்டவசத்தில் அந்த வேன் ஒரு பெரிய மரம் மீது மோதி நின்று விட்டது என மூச்சு விடாமல் கூறி முடித்து உள்ளார். இதனால், காயம் அடைந்தபோதும், அதனை கவனத்தில் கொள்ளாமல் கருணாகரன் ஓடி சென்று வேனில் இருந்த 16 பேரின் உயிரை பாதுகாத்து உள்ளார். இதற்காக அவருடைய உயரதிகாரிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்