சுற்றுச்சூழல் தர வரிசையில் இந்தியாவுக்கு கடைசி இடம் - மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடும் தாக்கு

180 நாடுகள் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-09 23:12 GMT

புதுடெல்லி,

180 நாடுகள் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் செயல்திறன் தரவரிசை பட்டியல், சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் இந்தியாவுக்கு கடைசி இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சாடி டுவிட்டரில் நேற்று ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

பா.ஜ.க. கூட்டணி அரசு தரவுகள் இல்லாத அரசு என நன்றாக அறியப்பட்டுள்ளது. தற்போது அது ஒத்திசைவு இன்மையை அனுமதிக்காத அரசாக உள்ளது. அதனால்தான் அது, 180 நாடுகளுடனான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் கடைசி இடத்தை பிடித்திருப்பதை நிராகரித்துள்ளது.

இதற்கு முன்பு கொரோனாவால் ஏற்பட்ட அதிகப்படியான இறப்பு பற்றிய உலக சுகாதார அமைப்பின் அறிக்கை மற்றும் உலகளாவிய பட்டினி குறியீடு ஆகியவற்றையும் நிராகரித்துள்ளது. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். இசைக்கிற இசைக்கு உலகம் ஆடாது என்பதை மோடி அரசு உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்