சர்வதேச விமான கண்காட்சி: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.;
Image Courtesy: @ANI
பெங்களூரு,
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்றுதொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அவரை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவன் ரோட்டில் உள்ள கவர்னர் மாளிகைக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டு சென்றார். நேற்று இரவு அவர் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
அதைத்தொடர்ந்து, இன்று காலையில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர். கண்காட்சி தொடங்கியதை அடுத்து விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதை பிரதமர் மோடி, பொதுமக்கள் ரசித்து வருகின்றனர்.
சர்வதேச விமான கண்காட்சியின் நோக்கமே இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது, விமான உதிரிபாகங்கள் தயாரிப்பு, ராணுவ தளவாடங்கள் கொள்முதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாகும்.