பா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம் இடஒதுக்கீட்டை பறிக்க முயல்கிறது - ராகுல் காந்தி
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை பறிக்க பா.ஜனதா முயற்சிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள், துணைச் செயலாளர்கள் போன்ற முக்கிய பதவிகளை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற யு.பி.எஸ்.சி.யில் தேர்ச்சி பெற்றவர்களையும், குரூப் ஏ சேவை அதிகாரிகள் மூலமே நிரப்பப்பட்டு வந்தன.
மத்திய அமைச்சகங்களில் காலியாகவுள்ள 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் / துணைச் செயலாளர்கள் பதவிகளை அரசு அலுவலர்கள் அல்லாத துறைச் சார்ந்த வல்லுநர்களை கொண்டு நிரப்புவதற்கு (லேட்டரல் என்ட்ரி) விண்ணப்பங்கள் வரவேற்பதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில், "லேட்டரல் என்ட்ரி என்பது தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகள் மீதான தாக்குதல். பா.ஜனதாவின் திரிக்கப்பட்ட ராம ராஜ்ஜியம், அரசியலமைப்பை அழிக்கவும், தாழ்த்தப்பட்டோரிடம் இருந்து இடஒதுக்கீட்டை பறிக்கவும் முயல்கிறது" என்று அதில் பதிவிட்டுள்ளார்.