மாலை மாற்றும்போது மணமகன் கைப்பட்டதால் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்

பெல்தங்கடியில் மாலை மாற்றும்போது மணமகனின் கைப்பட்டதால் இளம்பெண் திருமணத்தை நிறுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

Update: 2022-05-28 21:43 GMT

மங்களூரு

பெல்தங்கடியில் மாலை மாற்றும்போது மணமகனின் கைப்பட்டதால் இளம்பெண் திருமணத்தை நிறுத்திய பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருமணம் நிச்சயம்

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா மூடுகோனஜேவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும், நாராவி பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இவர்களின் திருமணம் கடந்த 25-ந்தேதி நாராவி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடக்க இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் தடபுடலாக செய்திருந்தனர்.

திருமணத்தன்று இருவீட்டை சேர்ந்த உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் பரிசு பொருட்களுடன் மண்டபத்துக்கு வந்திருந்தனர்.

திருமணத்தை நிறுத்தினார்

இந்த நிலையில் தாலிகட்டும் நேரத்தில் சம்பிரதாய முறைப்படி மணமக்கள் மாலையை மாற்றி கொள்ள வேண்டும் என்று புரோகிதர் தெரிவித்தார். அப்போது, மணமகன் தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து இளம்பெண்ணான மணமகள் கழுத்தில் போட்டார். அந்த சமயத்தில் மணமகனின் கை, தவறுதலாக மணமகள் மீது பட்டதாக தெரிகிறது.

இதனால் கோபம் அடைந்த மணமகள், தான் கையில் வைத்திருந்த மாலையை தூக்கி வீசியதுடன், கழுத்தில் கிடந்த மாலையையும் கழற்றி எறிந்துவிட்டு மணமேடையை விட்டு வெளியேறினார். பின்னர் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என கூறி மணமகன் மற்றும் மண்டபத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

போலீசார் பேச்சுவார்த்தை

இதையடுத்து இருவீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபம் போர்க்களம் போல காட்சி அளித்தது. திருமணத்துக்கு வந்தவர்கள் மணமக்கள் வீட்டாரின் சண்டையை வேடிக்கை பார்த்தனர். இதுபற்றி அறிந்ததும் வேனூர் போலீசார் விரைந்து வந்து இருவீட்டாரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மணமகளான இளம்பெண் தனக்கு திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருந்தார்.

இதேபோல், மணமகனும், தனக்கு இந்த பெண் வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து இருவீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருவீட்டாைரயும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மாலை மாற்றும்போது மணமகனின் கைப்பட்டதால் இளம்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்