மணிப்பூரில் இணையதள சேவை தடை மேலும் நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு
வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டது.;
Image Courtacy: AFP
இம்பால்,
மணிப்பூரில், கடந்த மே 3-ந் தேதி, இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. மோதலை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுப்பதற்காக, மே 3-ந் தேதி, இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு மேலாகியும் அங்கே வன்முறை சம்பவங்கள் முற்றிலுமாக ஓயவில்லை. இதனால் இணையதள சேவைக்கு தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மணிப்பூர் ரைபிள் படையினரின் முகாமில் கடந்த 1-ந்தேதி ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது. இதைத்தொடர்ந்து மாநிலத்தில் மீண்டும் பதற்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.
எனவே சமூக வலைத்தளங்கள் வழியாக வதந்தி பரவுவதை தடுக்க செல்போன் இணையதள சேவை துண்டிப்பை நாளை (8-ந் தேதி) வரை நீட்டித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மாநில உள்துறை கமிஷனர் ரஞ்சித் சிங் பிறப்பித்து உள்ளார்.
இதுதொடர்பாக மணிப்பூர் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்துதல், சமூக விரோதிகள் படங்கள், வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் வெறுக்கத்தக்க வீடியோ செய்திகளைப் பரப்புவது போன்ற குற்றங்களை மேற்கோள் காட்டி. மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலைமைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களின் உணர்வுகளைத் தூண்டும் இந்தக் கூறுகள் குறித்து அரசாங்கம் அச்சம் தெரிவித்தது.