பிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்க உள்ள ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கிறார்.

Update: 2023-03-09 00:03 GMT

ஆமதாபாத்,

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ், இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக நேற்று வந்தார். அவருடன் மந்திரிகள் உள்பட 27 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

முதலில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை குஜராத் மாநில முதல்-மந்திரி பூபேந்திர படேல் வரவேற்றார்.

சபர்மதி ஆசிரமம்

வரவேற்பை முடித்துக்கொண்டு, அந்தோணி அல்பனிஸ், சுதந்திர போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். அவருடன் முதல்-மந்திரி பூபேந்திர படேலும் சென்றார்.

ஆசிரமத்தை சுற்றி பார்த்தார். புகைப்படங்களை பார்வையிட்டார். காந்தி சிலைக்கு மரியாதை செய்தார்.

பின்னர், ஆஸ்திரேலிய பிரதமர் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

கிரிக்கெட் போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்குகிறது. முதல் நாள் போட்டியை பிரதமர் மோடியுடன் இணைந்து ஆஸ்திரேலிய பிரதமர் பார்க்கிறார். சில மணி நேரம் பார்த்த பிறகு அவர்கள் புறப்பட்டு செல்வார்கள்.

அவர்களின் வருகையையொட்டி, மைதானத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ஆமதாபாத்துக்கு வந்தவுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில், ''ஆமதாபாத்தில் வியத்தகு வரவேற்பு கிடைத்தது. இது, ஆஸ்திரேலிய-இந்திய உறவுக்கான முக்கியமான பயணத்தின் தொடக்கம்'' என்று அவர் கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்