அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்து விபத்து - 2 குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி பலி

புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Update: 2024-05-22 07:51 GMT

புனே,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள உஜானி அணைக்கட்டுப் பகுதியில் படகு கவிழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உஜானி அணைக்கட்டுப் பகுதியில் கலாஷி மற்றும் புகாவ் கிராமங்களுக்கு இடையே படகு சேவை செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த நிலையில் 7 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த விபத்தில் படகில் இருந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் ஆகிய 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படகில் இருந்த உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலை அதிகாரி ஒருவர் மட்டும் நீந்தி தப்பித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்