தூய்மை பணியாளர்கள் மாதம் ஒருமுறை உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்; கலெக்டர் ரமேஷ் அறிவுறுத்தல்

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் மாதம் ஒருமுறை தங்களின் உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் ரமேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2022-09-19 19:00 GMT

சிக்கமகளூரு;

ஆலோசனை கூட்டம்

சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரமேஷ் தலைமையில் நேற்று தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள நகரசபை, டவுன் பஞ்சாயத்து, புரசபையின் கீழ் பணியாற்றி வரும் தூய்மைபணியாளர்கள் மாதம் ஒரு முறை தங்களது உடலை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நலமாக இருந்தால் மட்டுமே அவர்கள் மற்றவர்களை தூய்மையாக வைத்துக் கொள்ள முடியும்.

வீடு கட்டி கொடுக்க...

தொழிலாளர்களுக்கு தரமான உணவு தானியங்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும், தரமான உணவு தானியங்கள் வழங்கவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். தூய்மை பணியாளர்கள் யார் எல்லாம் வீடுகள் இல்லாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்கு வீடு கட்டி கொடுப்பதற்கு அரசு முன்வந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு ஆயுட்கால காப்பீடு மற்றும் வங்கி கடன் உதவி, வாகன கடன் உதவி, கல்வி கடன், பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி போன்றவற்றை அரசு வழங்குவதற்கு முன் வந்துள்ளது. தூய்மை பணியாளர்கள் தங்களது பணி நேரத்தை தவிர மற்ற நேரத்தில் ஆரோக்கியத்தின் பக்கம் கவனம் செலுத்தி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

சீருடைகள் அணிந்து

அவர்கள் பணியின்போது முகக்கவசம் அணிந்தும், கையுறை, சீருடைகள் அணிந்தும் பணி செய்துவிட்டு ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்தார்.பேட்டியின்போது சுகாதாரத்துறை அதிகாரி மஞ்சுநாத் மற்றும் நகரசபை கமிஷனர் பசவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்