குடிபோதையில் விபரீதம்... சுவர்களுக்கு இடையே சிக்கி தொழிலாளி பலி

அவரது வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையே சிவசுப்பிரமணியன் சிக்கிக்கொண்டார்.

Update: 2024-02-10 02:57 GMT

ஏனாம்,

புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட ஏனாம் பிராந்தியத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 38). தொழிலாளியான இவருக்கு பெற்றோர் இல்லாததால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். திருமணமும் ஆகவில்லை என தெரிகிறது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்ட பின்னர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தூங்கினார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதில் அவரது வீட்டின் சுவருக்கும், பக்கத்து வீட்டு சுவருக்கும் இடையே சிக்கிக்கொண்டார். அதில் இருந்து அவரால் மீள முடியாமல் மயங்கியதாக தெரிகிறது. இரவு நேரம் என்பதால் யாரும் இதை பார்க்கவில்லை.

இந்தநிலையில் நேற்று காலை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது வீட்டின் சுவர்களுக்கு இடையே சிவசுப்பிரமணியன் மாட்டி இருந்தது தெரிவந்தது. உடனே அவர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து 1 மணி நேரத்திற்கு பிறகு அவரை மீட்டனர்.

பின்னர் அவரை சிகிச்சைக்காக ஏனாம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஏனாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மாடியில் தூங்கியவர் தவறி விழுந்து 2 வீடுகளின் சுவர்களுக்கு இடையே சிக்கி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்