ஆதிக் அகமது சுட்டுக் கொலை: உயர்மட்ட குழு விசாரணைக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-04-15 22:25 GMT

லக்னோ,

முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த சூழலில் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆதிக் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணைக்கு உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இந்த சம்பவம் குறித்து முதல்-மந்திரி யோகி ஆதியநாத், டிஜிபி ஆர்.கே.விஸ்வகர்மா மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பு டி.ஜி., பிரசாந்த் குமார் ஆகியோருடம் ஆலோசனை நடத்தினார்.

பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆதிக் மற்றும் அஷ்ரப் கொல்லப்பட்டது குறித்து முதல்-மந்திரி வருத்தம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்