தெருவில் புலி வேஷம் கட்டிய நபருடன் ஈடுகொடுத்து நடனமாடிய சிறுமி...! வைரல் வீடியோ

கர்நாடகவில் புலி வேஷம் கட்டி தெருவில் நடனமாடிய நபருடன் சிறுமி ஒருவர் நடனமாடி அசத்தியுள்ளார்.

Update: 2022-08-18 14:59 GMT

பெங்களூரு,

கடந்த 2021 நம்பரில் கன்னட மொழியில் வெளியான திரைப்படம் 'கருட கமன ரிஷப வாகன'. இந்த படம் கடலோர பகுதியான மங்களூரு மக்களின் வாழ்வியலை எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்திருந்தது. படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் புலி வேஷம் கட்டி ஆடும் நபர்களுக்கு என ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பார்கள். அது ஒருவிதமான வழிபாட்டு முறையாக பார்க்கப்படுவது போல இருக்கும். அந்த காட்சி மிகவும் கலக்கலாக இருக்கும்.

அந்த காட்சியை போலவே நிஜத்தில் கர்நாடக மாநிலத்தின் கடலோர பகுதிகளில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரி தசரா கொண்டாட்டத்தின் போது தெருக்களில் சிறு சிறு குழுவாக மக்கள் இணைந்து புலி வேஷம் கட்டி ஆடுவது வழக்கம் என தெரிகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் அங்குள்ள உடுப்பி நகரில் அண்மையில் அரங்கேறியுள்ளது.

அப்போது சிறுமி ஒருவர் புலி வேஷம் கட்டி ஆடிய நபருடன் இணைந்து தெருவில் நடனமாடி உள்ளார். இப்போது அந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

23 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் புலி வேஷம் கட்டி ஆடும் நபர் எடுத்து வைக்கும் நடன அசைவுகளை அப்படியே அச்சு தவறாமல் ஆடி அசத்தியுள்ளார் அந்த சிறுமி. 'சூப்பர் க்யூட்' என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்