பெண்மையும், விழிப்புணர்வு மங்கையும்..!

சானிட்டரி நாப்கின், மாதவிடாய் கால பராமரிப்பு போன்றவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வெளிப்படையாகப் பேசி வருகிறார் கிருத்திகா தேவி.;

Update:2023-01-29 14:46 IST

குடும்பத் தலைவியான கிருத்திகா தேவி, பெண்கள் பொதுவெளியில் பேசத் தயங்கும் விஷயங்களை, பலர் முன்னிலையில் சத்தமாகப் பேசுகிறார். குறிப்பாக சானிட்டரி நாப்கின், மாதவிடாய் கால பராமரிப்பு போன்றவற்றைப் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் வெளிப்படையாகப் பேசி வருகிறார். யார் இவர்?, எதற்காக இந்த முயற்சி?, எதை மையப்படுத்துகிறார்? போன்ற கேள்விகளுடன், கிருத்திகா தேவியைச் சந்தித்து பேசினோம்.

* நீங்கள் யார்? என்ன செய்கிறீர்கள்?

மதுரை என் சொந்த ஊர். பி.எஸ்சி வேதியியல் படித்திருக்கிறேன். எனக்குத் திருமணமாகி, இரு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். 15 வருடங்களுக்கு மேலாக, பல்வேறு விதமான பொறுப்புகளில் பணியாற்றிவிட்டு, இப்போது, பெண்மைக்கே உரியதான மாதவிடாய் கால விழிப்புணர்வுகளை, பள்ளி-கல்லூரி மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறேன்.

* எப்படித் தொடங்கியது இந்த பயணம்?

என்னுடைய உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள், நான் எதிர்கொண்ட சுகாதார பிரச்சினைகள்தான், பெண்கள் பொதுவாகப் பேச தயங்கும் விஷயங்களை சத்தமாகப் பேச வைத்திருக்கிறது. மேலும் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் சந்திக்கும் அவஸ்தைகளும், இப்படியொரு விழிப்புணர்வு பயணத்திற்கான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கின்றன.

* இதன் அவசியம் என்ன?

மாதவிடாய் காலங்களில் பெண்கள் கடைப்பிடிக்கும் சில ஒழுங்கற்ற பழக்கவழக்கங்கள், அவர்களை பெரும் சிக்கலில் சிக்கவைத்துவிடுகிறது. தவறு என்பதை உணராமலே, காலங்காலமாக அதைச் செய்கிறார்கள். அதைத் திருத்த முயல்கிறேன்.

* மாதவிடாய் கால பராமரிப்பில், பெண்கள் எந்தெந்த விஷயங்களில் தவறு செய்கிறார்கள்?

பெண்கள் முக அழகிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவு கூட நாப்கின் விஷயத்திற்கு கொடுப்பதில்லை. எத்தனை பெண்கள், சானிட்டரி நாப்கினின் காலாவதி தேதியைப் பார்த்து வாங்குகிறார்கள்?. யாருமே நாப்கினின் காலாவதி விவரங்களைக் கவனிப்பதில்லை.

காலாவதியான நாப்கின்களை பயன்படுத்துவது என்பது, காலாவதியான மாத்திரைகளால் உண்டாகும் ஆபத்தைவிட, இரு மடங்கு கூடுதலானது. அதுவும் 'சென்சிட்டிவ்' உறுப்பு என்பதால், ஆபத்து பல மடங்காகிறது.

மேலும், எந்தெந்த நாப்கின்கள் எந்தெந்த பொருட்களால் தயாராகிறது?, கேடு விளைவிக்கும் பொருட்கள் இருக்கிறதா?, அந்த நாப்கினின் வெளி உலக கருத்து எப்படி இருக்கிறது? போன்ற விஷயங்களில் பெண்கள் கவனம் செலுத்துவதே இல்லை.

பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்-பேப்பர்-அட்டை கழிவுகள் மூலமாகவே உருவாக்கப்படுகின்றன. அதில் டயாக்ஸின் என்ற நச்சுப்பொருள் இருப்பதால், பெண்மை சார்ந்த விஷயங்களில் பல ஆரோக்கிய சீர்கேடுகள் உண்டாகின்றன.

* எந்தெந்த விஷயத்தில் கவனம் தேவை?

பெரும்பாலான பெண்கள் அசுத்தம் நிரம்பிய நாப்கினை, 12 மணி நேரம் வரை தொடர்ச்சியாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஒரு நாப்கினை 3 மணிநேரம் மட்டுமே உபயோகிக்க வேண்டும். ஏனெனில் அசுத்தம் நிரம்பிய ரத்தத்தில் பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். அவை பல்கிப் பெருகும் பட்சத்தில், பல ஆரோக்கிய சீர்கேட்டைச் சந்திக்க நேரிடும். ஏன்...? 'சர்விக்கல் புற்றுநோய்' ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

* எப்படித் திருத்திக் கொள்வது?

ஆரோக்கியமான, சுகாதாரமான இயற்கையான நாப்கின்களை பயன்படுத்துங்கள். அதாவது பிளாஸ்டிக் பொருட்களில் தயாராகும் நாப்கின்களைவிட, பருத்தி துணிகளில் தயாராகும் பாரம்பரிய முறையிலான நாப்கின்கள் சிறப்பானதாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்திற்கு வழிவகுக்கும் நாப்கின்களே, பெண் ஆரோக்கியத்திற்கும், சுகாதாரத்திற்கும் சிறந்தது. 24 மணிநேரமும் பாக்டீரியாக்களுடன் போராடக்கூடிய அயனிகள் அடங்கிய நாப்கின்களும் சந்தையில் இருக்கின்றன. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளை சீராக்கும் அகச்சிவப்பு கதிர் மற்றும் உடல் சோர்வடைவதைத் தவிர்க்க உதவும் காந்த சக்தி மற்றும் வைட்டமின் டி அடங்கிய சுகாதாரமான நாப்கின்களும் நிறைய இருக்கின்றன. இதனுடன், மண்ணில் எளிதாக மக்கக்கூடிய நாப்கின்களை தேர்வு செய்து பெண்ணையும், மண்ணையும் சுகாதாரமாக பாதுகாக்க வேண்டும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்ல விஷயம் என்றாலும், ஆரோக்கியம் சார்ந்த, குறிப்பாகப் பெண்மை சார்ந்த விஷயங்களில் அதுபோன்ற தவறுகளைச் செய்துவிடக்கூடாது. முடிந்தவரை, இயற்கை முறையில் உயர்தரத்தில் தயாரான நாப்கின்களை வாங்கி பயன்படுத்துங்கள்.

* சின்ன சின்ன விஷயங்கள் எத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்?

நிறையப் பெண்கள் மாதவிடாய் காலங்களில் இயல்பிற்கு அதிகமான வலியை உணர்கிறார்கள். இந்த காலத்துப் பெண்களில் பலருக்கு பி.சி.ஓ.டி. பிரச்சினை வெகு இயல்பாகிவிட்டது. அதேபோல மலட்டுத் தன்மை, மார்பக புற்றுநோய், வெள்ளைப்படுதல் பிரச்சினைகளும் அதிகரித்திருக்கிறது. இவை அனைத்திற்கும், பெண்களின் மாதவிடாய் கால ஒழுங்கற்ற பழக்கவழக்கங்களும் முக்கிய காரணமாகின்றன. கடந்த 2 ஆண்டுகளாக, இதுதொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவாய், இதைக் கண்டறிந்திருக்கிறேன்.

* உங்களுடைய விழிப்புணர்வு எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என நம்புகிறீர்கள்?

இதுவரை 15-க்கும் மேற்பட்ட பள்ளி-கல்லூரிகளுக்குச் சென்று, அங்குப் பயிலும் மாணவிகளுக்கு, மாதவிடாய் கால விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறேன். பெண் காவல் நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் சென்று, அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கியிருக்கிறேன். நிறைய செமினார்களை நடத்தியிருக்கிறேன். சமூக வலைத்தளங்கள் வழியாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களைப் பகிர்ந்திருக்கிறேன். இத்தகைய செயல்கள், பெண்களின் மாதவிடாய் பழக்கத்தை ஒழுங்குபடுத்தி, உயிரிழப்புகளைக் குறைக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்