மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை,பணம் கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை

மின்வாரிய ஊழியர் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-06-12 06:22 GMT


வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்.இவர் கிருஷ்ணகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி. பரமேஸ்வரியின் தந்தை கடந்த வாரம் மேல்பாடியில் காலமானதால் சங்கர் குடும்பத்துடன் துக்க நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்தார்.

இந்நிலையில், இன்று காலை சங்கரின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சங்கர் வீட்டை வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்கருக்கும்,வேலூர் வடக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதை கேட்டு சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்பாடியில் இருந்து இன்று காலை வீட்டிற்கு வந்தனர்.

இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அறையில் இருந்த இரண்டு பீரோக்களை உடைத்து அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள்,2 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.70 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது.

ஆனால், பீரோவில் இருந்த கவரிங் நகைகளை மட்டும் எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்