கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-07-13 16:33 GMT

சோழிங்கநல்லூர் அடுத்த அரசன்கழனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன் (வயது 30). பா.ம.க. பிரமுகரான இவர் தனியார் கால் டாக்சியியில் டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த 25-ந்தேதி தாம்பரம் அடுத்த மெப்ஸ் பகுதியில் இருந்து செங்கல்பட்டு வரை கால் டாக்சி பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு வந்த டிரைவர் அர்ஜுன் மர்ம நபர்களால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு செங்கல்பட்டு அடுத்த வல்லம் பஸ் நிலையம் அருகே வீசப்பட்டார்.

இவரது உடலை கைப்பற்றிய செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இதற்கிடையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சியினரும், தளியார் கார் டிரைவர் நலச்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைத்து கார் நிறுவனத்தில் பதிவு செய்த செல்போன் எண்ணை வைத்து பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (26), திருமூர்த்தி (22), கட்டிமுத்து (25). ஆகியோரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிடிபட்டவர்கள் காரை கடத்தி ஏ.டி.எம் எந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக போலீசில் வாக்குமூலம் அளித்திருந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய லோகநாதன் (22) மற்றும் 18 வயதான ஒருவர் என இருவரை போலீசார் நேற்று கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்